தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியை உள்ளிட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம்

webteam

சென்னையில் டியூசன் படிக்கச் சென்ற மாணவியை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்தவர் மற்றும் உடந்தையாக இருந்த ஆசிரியை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தி.நகரில் டியூசன் படிக்க வரும் மாணவிகளுக்கு பாலாஜி என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்து விசாரித்தனர். அப்போது டியூஷன் படிக்க வந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தும் மேலும் அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டியதும் தெரியவந்தது. மேலும் டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மொபைலில் சேமித்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து பாலாஜியையும் அவருக்கு உடந்தையாக இருந்த டியூஷன் ஆசிரியை சஞ்சனாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான பாலாஜி மற்றும் சஞ்சனா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.