தமிழ்நாடு

பண்ணாரி அம்மன் கோவில் விழா: குண்டத்தில் தவறி விழுந்த பெண் காயம்!

webteam

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில், குண்டத்தில் தவறி விழுந்த பெண் பக்தர் காயமடைந்தார்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். குண்டத்தில் தவறி விழுந்த பெண் பக்தர் காயமடைந்தார்.

பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 4 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாகக் குண்டம் விழா இன்று காலை நடைபெற்றது. 

பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை 4.00 மணிக்கு  படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. 

குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 4.10 மணிக்கு முதலில் பூசாரி ராஜேந்திரன் குண்டத் தில் இறங்கி தீ மிதித்தார். அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா உள்ளிடோர் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மாண விகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள், வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர்.

சரோஜா என்ற பெண் தீ குண்டத்தில் நடந்தபோது நிலைதடுமாறி விழுந்தார். அப்போது தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு முதலுதவிக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.