தமிழ்நாடு

தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்

JustinDurai

ரயில் பயணிகள் தகுந்த காரணம் இன்றி வண்டியின் அலார செயினை இழுக்கக் கூடாது என கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மனோகரன்  தலைமையில், எஸ்எஸ்ஐ லோகநாதன் மற்றும் காவலர்கள் நடத்திய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பயணிகள் தகுந்த காரணமின்றி ரயில் வண்டியில் இருக்கும் அலார செயினை  இழுத்து வண்டியை நிறுத்தக்கூடாது, மீறினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 143ன் படி தண்டிக்கப்படுவீர்கள் என்றும், பயணிகள் படியில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது மீறினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 156ன் படி தண்டிக்கப்படுவீர்கள் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் நடைமேடைக்கு ரயில் வரும் அரைமணி நேரம் முன்னதாக  பயணிகள் வர வேண்டும் என்றும், பயணிகள் அலார செயின் மீது தங்களுடைய லக்கேஜ் மற்றும் சாமான்களை வைக்கவும், மாற்றவும் கூடாது என்றும், இதன் விளைவாக வண்டி தாமதமாக சென்றடையும் என்றும், ரயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும், பெண் பயணிகள் இரவு பயணத்தின்போது ஜன்னல்களை மூடிக்கொண்டு பயணிக்க வேண்டும் எனவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிக்கலாம்: கிருஷ்ணகிரி: பிளஸ் 2 மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ