செய்தியாளர்: விவேக்ராஜ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக தேரில் சுவாமிகள் எழுந்ததருள செய்யப்பட்டனர். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் நாகேஷ்வரா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளின் வழியாக வலம்வந்து கோயிலை அடைந்தது.
திரளான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொடர்ந்து நாளை மகாமக குளத்தில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தல் கலந்து கொள்வார்கள் என எதிர்பாாக்கப்படுகிறது.