செய்தியாளர்: கு.விவேக்ராஜ்
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (45), இவர், பட்டுக்கோட்டையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சதீஷ்குமார், அவரது மனைவி சத்யா (40), இவர்களது மகன் ஸ்ரீராம் (17), மகள் அன்பிஸ்ரீ (15) ஆகியோர் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு பட்டுக்கோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தடுப்புச் சுவரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சதீஷ்குமார் மனைவி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மகன் ஸ்ரீராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து பலத்த காயமடைந்த சதீஷ்குமார் அவரது மகள் அன்பிஸ்ரீ ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.