தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: ஆடு மேய்த்தவரை மிதித்துக் கொன்ற காட்டுயானை - கிராம மக்கள் சாலை மறியல்

webteam

அஞ்செட்டி அருகே யானை தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா, காப்புக்காட்டில் மரகட்டா கிராமத்தைச் சேர்ந்த பாண்டே முனியப்பா என்பவரின் மகன் வெங்கடேஷ் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று தன்னை நோக்கி வருவதைப் பார்த்த அவர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் யானை அவரை விரட்டிச் சென்று தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து யானை தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குவந்த அஞ்செட்டி வனத் துறையினர், போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் இதையடுத்து உயிரிழந்த வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.