தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: சமத்துவபுரம் பெரியார் சிலையை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்

kaleelrahman

கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கத்தாழைமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், பெரியார் சிலைக்கு டயர் அணிவித்து தீ வைப்பு. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமத்துவபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் கத்தாழைமேடு என்னும் இடத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. 150 வீடுகள் உள்ள இந்த சமத்துவபுரத்தை கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய ஊராக வளச்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார்.


இந்நிலையில் சமத்துவபுரத்தின் நுழைவுவாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு, மர்ம நபர்கள் சிலர் டயர் மாலை அணிவித்து, தீ வைத்துள்ளனர். இன்று காலை இதை பார்த்த அப்பகுதி மக்கள், டயர்களை அகற்றி, தீயை அணைத்து பெரியார் சிலையை சுத்தப் படுத்தினர். மேலும், இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, பெரியார் சிலை முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த மகாராஜகடை காவல்நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினர். மர்ம நபர்கள் பெரியார் சிலையை தீ வைத்து கொளுத்திய சம்பவம் கிருஷ்ணகிரி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது