கெலவரப்பள்ளி அணை புதிய தலைமுறை
தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தென்பெண்ணையில் 2வது நாளாக ரசாயன நுரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2வது நாளாக தென்பெண்ணையில் ரசாயன நுரை பாய்ந்தோடுகிறது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், தென்பெண்ணையாற்றில், 2வது நாளாக ரசாயன நுரை பெருக்கெடுத்து ஓடுகிறது.

முன்னதாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 600 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், இன்று காலை நீர்வரத்து அதிகரித்து, 680 கன அடியாக உயர்ந்தது.

இதனால் அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.16 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. இதையடுத்து அணையின் மணல் போக்கி மதகு வழியாக, 600 கன அடி, மூணாவது ஷட்டர் வழியாக, 80 கன அடி என மொத்தம், 680 கன அடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது.

கர்நாடகாவிலிருந்து வந்த உபரி நீரில் அதிகளவு சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் கலந்திருந்ததால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்ட நீரில், 2வது நாளாக ரசாயன நுரை ஏற்பட்டுள்ளது. இது கடும் துர்நாற்றத்துடன் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அணையின் இடதுபுற கால்வாயிலும் அதிகளவில் ரசாயன நுரை தேங்கி நிற்கிறது. இதன் காட்சிகள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.