கிருஷ்ணகிரியில் மகன்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி, மத்தூரை அடுத்த கவுண்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (45). இவரது மனைவி ரஞ்சிதா (40). இவர்களுக்கு லெனில் (22) விமல் (20) என்ற மகன்கள் உள்ளனர். சண்முகத்திற்கும், ரஞ்சிதாவிற்கு சில குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மகன்களும் குழப்பத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் சண்முகம் குறித்து ரஞ்சிதா அவர் மகன்களிடம் குறை கூறியதாக தெரிகிறது. இதனால் லெனில் மற்றும் விமல் ஆகியோர் தங்கள் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாற, லெனில் மற்றும் விமல் சேர்ந்து தந்தை சண்முகத்தை தாக்கியுள்ளனர். இதனால் சண்முகம் மன விரக்தி அடைந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த சண்முகம், வீட்டிலிருந்து வெளியேறி சாலூரில் உள்ள தனது நண்பர் ராஜா என்பவரது வீட்டில் நேற்று இரவு தங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சண்முகத்தை காணவில்லை என ராஜா தேடியுள்ளார். பின்னர் சண்முகத்தின் மகன்களுக்கு தகவல்கொடுத்து, அனைவரும் சேர்ந்து தேடியுள்ளனர்.
அப்போது குன்னத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஒரு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. உடனே அங்கு லெனில் மற்றும் விமல் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அங்கு சண்முகம் உடல் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதைக்கண்டதும் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் சிதறிக்கிடந்த உடலை மூட்டை கட்டி வீட்டிற்கு எடுத்துவந்துள்ளனர். வரும் வழியிலேயே ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் உடல் இருந்த இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
குறிப்பு : எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பதும் கொலை செய்வது என்பதும் தீர்வல்ல. கொலை செய்தால் சட்டதின் முன் தண்டிக்கப்படுவோம். தற்கொலை நம்மை கோழையாக்கும். தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள பல்வேறு அமைப்புகள் பயிற்சி அளிக்கின்றன. அதனை பயன்படுத்தி வாழ்க்கையை நாமே மாற்றியமைக்கலாம்
சினேகா அமைப்பு முகவரி : எண் 11, பார்க் வியூ சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை 28.
தொடர்பு எண் : 044 - 24640050, 24640060