செய்தியாளர்: அரிபுத்திரன்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி (48). இவரும் இவரது கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்களும் சந்தூர் சாலையில் காரை நிறுத்திவிட்டு ஈமச்சடங்கிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரில் தீ பரவத் தொடங்கி உள்ளது. இதையடுத்து கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் கொண்டு அணைத்தனர். இதற்குள்ளாக கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதன் காரணமாக சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.