தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னப்பன் ஏரியில் தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாசலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி (44) என்பவர்; ஊத்தங்கரை பகுதியில் தங்கி கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது மகன் சக்திவேல் (13), சக்திவேலின் சகோதரி மற்றும் அவரது தாயுடன் இன்று காலை சென்னப்பன் ஏரியில் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் வந்துள்ளனர்.

அப்போது சிறுவன் சக்திவேல் ஏரி தண்ணீரில் இறங்கிய சிறுவன், நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளான். பொதுமக்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துமனையில் சேர்த்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.