தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: பட்டியில் அடைத்திருந்த 13 ஆடுகள் பலி – மர்ம விலங்கு கடித்ததா?

webteam

ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலியானதோடு 5 ஆடுகள் இறக்கும் நிலையில் உள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தில் உள்ள திருமணி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பார்த்திபன். இவர், சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல மேய்ச்சல் முடித்து தனது வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் அனைத்து ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை மேய்ச்சலுக்குச் செல்ல பட்டியை வந்து பார்த்துள்ளார். அப்போது பட்டியில் அடைத்து வைத்திருந்த 13 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து பலியாகி இருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பலத்த காயங்களுடன் 5 ஆடுகளை மீட்டார். அதுவம் இறக்கும் தருவாயில் உள்ளது. இதனால் அவருக்கு சுமார் 1,50,000 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.