செய்தியாளர்: மணிசங்கர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், எலிசபெத் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக கடந்த 26ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் உள்ள கழிப்பறைக்கு எலிசபெத் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில், மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்த அவரைக் கண்ட தாய் ஜெயாவதி, மற்றவர்கள் உதவியுடன் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த எலிசபெத் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உயிரிழந்த எலிசபெத் ராணியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில் கழிப்பறையில் வழுக்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பெண் வழுக்கி விழுந்து இறந்தாரா அல்லது உடல் ரீதியா பாதிப்பு ஏற்பட்டு மயங்கி இறந்தாரா என்பது குறித்து உடற்கூறாய்வுக்கு பின்னர் தான் தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.