தமிழ்நாடு

கோவில்பட்டி: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

kaleelrahman

கோவில்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் செஞ்சுரிபயர் ஒர்க்ஸ் என்ற தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் பிரபாகரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 கட்டடங்கள் உள்ள நிலையில், இங்கு 130 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலவை நிரப்பும் இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு அந்த அறை கட்டடம் முழுவதுமாக வெடித்துச் சிதறி தரை மட்டமானது. இதில், அந்த கட்டடத்தில் இருந்த ஈராட்சியைச் சேர்ந்த ராமர், தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (47), குமாரபுரத்தைச் சேர்ந்த பொய்யாழி மகன் தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து கொப்பம்பட்டி காவல்நிலையம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அந்த கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் .ராஜூ, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார், கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.