நடப்பு சட்டமன்றத் தேர்தலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளராக களம் காண்பவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். அவர் இத்தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னை ஆர்கே நகர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், முதல்முறையாக இந்தத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் கடம்பூர் ராஜூ 3ஆவது முறையாக களம் கண்டார். மார்க்சிஸ்ட் சார்பில் சீனிவாசனும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கோமதியும், மக்கள் நீதிமய்யம் சார்பில் கதிரவனும் களத்தில் உள்ளனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவை வீழ்த்தி கணிசமான வாக்குகளில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றிருந்தாலும், இம்முறை தொகுதி மாறி கோவில்பட்டியில் களமிறங்கியுள்ளார். அமமுகவை பொறுத்தவரை உள்ளாட்சித்தேர்தலில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வெற்றி பெற்ற கட்சி. இங்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு 19 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் கிடைத்ததும் டிடிவி தினகரன் இங்கு போட்டியிடுவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
தொடக்கத்தில் சசிகலா ஆதரவாளராக அறியப்பட்டவரான கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில் கோவில்பட்டி கைக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அமமுக தரப்பில் இருக்கிறது.
ஆனால், இத்தொகுதி தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இங்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனும் கடும் போட்டியாகவே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகரை போல கோவில்பட்டியிலும் ஆச்சர்யத்தை நிகழ்த்துவாரா டிடிவி தினகரன் என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிந்துவிடும்.