தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் பிரசவ வலிக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள், மருத்துவமனைக்கு வெளியில் உள்ள பாதுகாப்பு இல்லாத பொதுவெளியில் காத்திருக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. பிரசவ வலி வந்தால் மட்டுமே அவர்களுக்கு படுக்கை வசதி தரப்படுகிறது. இந்த அவல நிலையால், அப்பகுதி கர்ப்பிணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி தீப்பெட்டி, விவசாயம், நூற்பாலை மற்றும் கடலைமிட்டாய் தயாரிப்பு என பல்வேறு தொழில்களை கொண்டுள்ளதால் ஏரளமான தொழிலாளர்கள் கொண்ட நகரமாக உள்ளது. மேலும் சுற்றுவட்டார மக்களின் அனைத்து தேவைகளுக்கு மிக முக்கிய நகரம் கோவில்பட்டி தான். அதிலும் குறிப்பாக மருத்துவ சேவைக்கு பலரும் கோவில்பட்டி நகரினை நம்பியுள்ளனர். இவர்களுக்கான முக்கியமான மருத்துவமனையாக, கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவிலும் 500க்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக பிரசவத்திற்கு அதிக மக்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.
இங்கு பிரசவத்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் காரணத்தினால், தற்போதுவரை நாளுக்கு நாள் இங்கு பிரசவத்திற்கு கர்ப்பிணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால் அதிகப்படியாக கர்ப்பிணிகள் வருவதனால், பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவுக்கு, படுக்கைகள் இல்லாமல் போயிருக்கிறது. தினமும் 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு வரும் நிலையில், வெறும் 196 படுக்கைகள் மட்டுமே பிரசவ வார்டில் உள்ளது. இதனால் மற்றவர்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியாத சூழ்நிலை அங்குள்ள பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாற்று வசதி எதுவும் செய்யவில்லை என்பதால் பிரசவ வார்டு அருகே அமைக்கப்பட்டிருக்கும் ‘சிகிச்சை பெறுபவர்களுடன் தங்கி இருப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட ஷெட்’டில் கர்ப்பிணி பெண்கள் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித பாதுகாப்பும் இல்லமால் இரவும், பகலும் அவர்கள் ஷெட்டில் உள்ளனர். பிரசவ வலி வந்தால் மட்டுமே அவர்களுக்கு பெட் வழங்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதுவொருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை வாங்க மறுப்பதால், பிரசவ வார்டு பகுதியில் குப்பைகளை எரிக்கப்படும் அவலமும் உள்ளது. இதனால் பிரசவ வார்டிலுள்ள கர்ப்பிணிகள் புகையினாலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
கடந்த ஆண்டுகளில், இம்மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளிளுடன் தங்குபவர்கள், வெளியில் அரசு மருத்துவமனை வளாகங்களில் தூங்கக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்குவதற்காக சுமார் 40 லட்ச ரூபாய் மத்தியரசு நிதி உதவியுடன் தனியாக கட்டடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் அந்த கட்டத்தில் ‘ஜீவ அனுக்கிரகா’ என்ற தனியார் அறக்கட்டளை மூலமாக படுக்கைகள், மின்வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அந்த கண்காணிப்பில் விடப்பட்டு இருந்தது. இதனால் நோயாளிகளுடன் தங்குபவர்கள் அதனை பயன்படுத்தி வந்தனர். வெளியூரில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள் உடன் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. சிறப்பாக செயல்பட்டு வந்த கட்டடம், கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது மட்டுமின்றி, கொரோனா சிறப்பு வார்டாகவும் செயல்பட்டது.
ஆனால் தற்பொழுது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையிலும், அந்த கட்டடம் எவ்வித பயன்பாட்டிற்கும் இல்லமால் மூடப்பட்டுள்ளது. அந்த அறை மூடப்பட்டுள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் உடன் வந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஷெட்டுகளில் தங்கி இருக்கும் நிலை உள்ளது. மழை, வெயில் என பல்வேறு இன்னல்களுக்கு இடையே அதில் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த கட்டிடத்தினை திறக்க பலரும் கோரிக்கை வைத்தும் திறக்கப்படவில்லை.
இதையும் படிங்க... கோவில்பட்டி : தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில பயங்கர தீ விபத்து
மருத்துவனை நிர்வாகம் நகராட்சியையும், நகராட்சி நிர்வாகம் மருத்துவமனை நிர்வாகத்தினையும் காரணம் காட்டி வருவதால் அந்த கட்டிடம் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அந்த கட்டடம் அரசு மருத்துவனை வளாகத்தில் இருந்தாலும், அது நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளதால் அதனை திறப்பது குறித்து நகராட்சி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. போதிய படுக்கைகள் இல்லாமால் கர்ப்பிணிகள் பரிதவித்து வர, மற்றொரு புறம் 40லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் அமைக்கப்பட்டு அது செயல்படவில்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்களுடன் உடனிருப்பவர்கள் தங்கும் இடம் இல்லமால் பரிதவிக்கும் நிலை உள்ளது.
உறைவிட கட்டடத்தினை நிர்வகித்து வந்த ‘ஜீவ அனுக்கிரகா’ அறக்கட்டளை நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில், “40 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டடம் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், மினரல்வாட்டர், படுக்கைகள், கண்காணிப்பு கேமரா என ஒரு வீட்டில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளும் செய்ததோம். இதனால் சிகிச்சை பெறுபவர்களுடன் உடன் இருப்பர்களுக்கு வசதியாக இருந்தது. கொரோனா தொற்று காரணத்தினை காரணம் காட்டி கட்டடம் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது கட்டட வசதி இல்லமால் பலரும் மருத்துவமனை வளாகத்தில் தங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை திறக்க மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் என இரு தரப்பினரையும் அணுகி தெரிவித்தோம். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார்.
இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசனிடம் கேட்ட போது, “பிரசவத்திற்காக இங்குவரும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் குறைவான படுக்கைகள் தான் இருக்கிறது. இதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. விரைவில் அதன் பணிகள் முடியுமென எதிர்ப்பார்க்கிறோம். அது முடிந்தால் அதிகமான படுக்கைகள் கிடைக்கும். அதன்மூலம் கர்ப்பிணிகள் வெளியில் இருப்பதை தடுக்க மாற்று நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறினார்.
உறைவிட கட்டடம் திறப்பது கூறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது, “மருத்துவமனை நிர்வாகம் தவறு காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. விரைவில் அதை சரிசெய்து, கட்டடத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும்” என தெரிவித்தார்.
போதிய படுக்கை வசதி இல்லமால் கர்ப்பிணிகள், மருத்துவ கழிவு புகையினை சுவாசித்து கொண்டு இருக்கும் நிலை உள்ளதால் இதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுப்பட்டு அனைத்து வசதிகளுடன் உள்ள உறைவிட கட்டிடத்தினை திறக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- ராஜேந்திரன்