கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த 497 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் கூறியுள்ளார்.
கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 32 பேர் டெங்கு காய்ச்சலாலும் 183 பேர் சாதாரண காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக அவ்வப்பொழுது உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் சூழலில், இது குறித்து அரசு மருத்துவமனை டீன் அசோகனிடம் கேட்டபோது, கோவை அரசு மருத்துவமனையில் ஒருவர் டெங்குவாலும், ஒருவர் மலேரியாவாலும், ஒருவர் பன்றிக் காய்ச்சல் காரணமாகவும் உயிரிழந்து இருப்பதாக கூறினார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.