தமிழ்நாடு

காதல் திருமணத்தால் மோதல்: 7 பேர் கைது

webteam

தருமபுரியில் காதல் திருமணம் செய்துக் கொண்ட விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிக்களூரை சேர்ந்தவர் விஜய் (28). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுகுணாவும்(22) காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். ஏற்கெனவே இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் இவர்களது திருமணம் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைக்கலப்பாக மாறி ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். 

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தீபக்குமார் மற்றும் திருப்பதி ஆகிய இருவரும் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் தனித்தனியே புகார் தெரிவித்தனர். இருவரின் புகாரையும் ஏற்ற காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் இருதரப்பையும் சேர்ந்த தீபக்குமார், சுந்தரம், தீபக், ராமு, சசிகுமார், திருப்பதி, தமிழரசன், ஆகியோரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்