தமிழ்நாடு

கோத்தகிரி: குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் - அச்சத்தில் பொதுமக்கள்

webteam

கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு கரடிகள் நீண்ட நேரம் உலா வந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் வீட்டின் தடுப்புச் சுவர் மீது ஏறி குடியிருப்பினுள் நுழைந்தது. சுமார் ஒரு மணிநேரம் அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்த பின்னர் இரு கரடிகளும் மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப் பகுதிக்குள் சென்றது.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இதே குடியிருப்பு பகுதியில் இரண்டு கருஞ்சிறுத்தைகள், உட்பட நான்கு சிறுத்தைகள் இதே வீட்டை சுற்றிச் சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்திருப்பதால் வனத் துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.