தமிழ்நாடு

நகையை திருடியதாக கூறியதால் வாக்குவாதம் - நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

webteam

கொரட்டூரில் நண்பரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, நெய்வயல் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய சுபாஷ்(24) என்பவரும், வாணியம்பாடியை சேர்ந்த பாபு(25) என்பவரும் பாடி, யாதவாள் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து அறையில் வைத்திருந்த பாபுவின் தங்க செயின் காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து, ஆரோக்கிய சுபாஷிடம் பாபு கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஆரோக்கிய சுபாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக பாபுவை குத்தியுள்ளார். இதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் ஆரோக்கிய சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, ஆரோக்கிய சுபாஷ் மீது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.