உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோயில்களின் அசையா சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, மதுரை ஆட்சியர் வீரராகவ ராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் குழு குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறியுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த 12ஆம் தேதி வெளியிட்ட உத்தரவை ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் குறித்த விவரத்தை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறநிலையங்களின் அசையாச் சொத்துகள் விவரத்தை புலனாய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையர் ஜெயா தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் கிராம நிர்வாக அலுவலர்கள் அத்தியாவசிய உறுப்பினர் என்றும், அவர்களுக்கு இந்தப் பணியில் அவசியத்தை அறிவுறுத்தி ஒத்துழைப்பைப் பெறுமாறும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா வலியுறுத்தியுள்ளார்.