தமிழ்நாடு

கொட நாடு காவலாளி கொலை...கொன்றது கேரள கும்பலா...

webteam

கொட நாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது கேரளாவை சேர்த்த கும்பலா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது. கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத எட்டு நபர்கள் திடீரென கொடநாடு பங்காளாவின் 8 வது நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் ஓம்பகதூர், கிருஷ்ணபகதூர் ஆகியோர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியதில் ஓம்பகதூர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள பங்களாக்களில் தங்கியிருந்தவர்களின் பட்டியலை சேகரித்துள்ளனர். காவலாளி ஓம்பகதூர் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்ட துணியில் மலையாள எழுத்துக்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். எனவே கொலை செய்தது கேரளாவைச் சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக மலையாள மொழி பேசும் ஒருவர் சிக்கியிருப்பதாகவும், அவர் யார்? பின்னணி என்ன என்பது பற்றி விசாரணை நடந்துவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகப்படும் நபரின் மாதிரி புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், தற்போது சென்னை மற்றும் கேரள எல்லையில் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நகை மற்றும் ஆவணங்கள் திருடும் முயற்சியில் இந்த கும்பல் ஈடுபட்டதா? என்னென்ன பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பார்கள் என்பதெல்லாம் கொலையாளிகளை கைது செய்த பின்னரே தெரியவரும் என்று கோத்தகிரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.