எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ட்விட்டர்
தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு!

PT WEB

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் கனகராஜ். இவரின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடைவிதிக்கக்கோரியும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்டஈடு வழங்கக்கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதின்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

kodanadu estate

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தனது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

அதன்படி சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையரான எஸ்.கார்த்திகைபாலன், நேற்று எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்தார். இதுதொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் கார்த்திகைபாலன், விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.