தமிழ்நாடு

கொடைக்கானலில் பசி, பட்டினியுடன் தவிக்கும் கிராம மக்கள்... அரசு உதவ கோரிக்கை

கொடைக்கானலில் பசி, பட்டினியுடன் தவிக்கும் கிராம மக்கள்... அரசு உதவ கோரிக்கை

webteam

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் உள்ள பதினாறு பழங்குடியினர் கிராமங்களை சேர்ந்த 450 குடும்பங்கள் பசி, பட்டினியுடன் நிவாரண பொருட்களுக்காக ஏங்கும் நிலை உருவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிழக்கு செட்டி பட்டி கிராமத்தை சுற்றி, இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அவற்றில் சில கிராமங்களுக்கு, அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அமைப்புகள் மூலம் உணவு நிவாரண பொருட்கள் கிடைத்துள்ளன.

ஆனால் எழுத்திரைக்காடு, கொரவனாச்சி ஓடை, பாறைப்பட்டி, புலையன் கால்வாய், சொடலைப்பாறை, கரடிப்பாறை, நடனங்கால்வாய், சேம்படி ஊத்து, பள்ளத்து வளவு, கவுச்சிக்கொம்பு, கடையமலை, கள்ளக்கிணறு, கூட்டப்பாறை, குன்றுக்காடு உள்ளிட்ட பதினாறு கிராமங்களை சேர்ந்த 450 குடும்பங்களுக்கு கடந்த மாதம் அரசு கொடுத்த குடிமைப்பொருட்கள் தவிர்த்து வேறு நிவாரண உணவு பொருட்கள் செல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பால் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பசி பட்டினியுடன் வாழ்வதாக கவலை தெரிவிக்கின்றனர். அரசு நிவாரணம் கிடைக்காத இந்த கிராமங்களை கவனத்தில் கொண்டு, காய்கறி, மளிகை பொருட்கள், சத்து மாவு, பால், முட்டை உள்ளிட்ட நிவாரண உணவு பொருட்களை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் கேட்டபோது, அவர்கள் தேவைகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.