தமிழ்நாடு

‘எனக்கு மயக்கம் வருது’ .. பாம்பு கடித்து உயிரிழந்த 6 வயது சிறுவன்.. ஆத்தூர் அருகே சோகம்

sharpana

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடிமேற்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவருக்கு புனிதா என்ற மனைவியும் அபிராமி , சரண்யா என்ற மகள்களும் சபரீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இக்குடும்பம் தங்களது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். சபரீஸ்வரன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்துள்ளது. பெற்றோரிடம் சபரீசன் தனக்கு மயக்கம் வருகிறது என்று கூறியுள்ளான். இதனால், அதிர்ச்சியடைந்த சக்திவேல் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் இடது காலில் பாம்பு கடித்துள்ளதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 6 வயது சிறுவனை பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.