தமிழ்நாடு

கீழடி 5ஆம் கட்ட ஆய்வு ‘கடைசி நாள்’ - குவியும் மக்கள்

webteam

கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில், அங்கு ஏராளமானோர் திரண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

மதுரை அருகே வைகை ஆற்றங்கரையோரம் கீழடியில் ஏற்கெனவே 4 கட்டங்களாக நடந்து முடிந்த அகழாய்வில் பழந்தமிழர்களின் நாகரிகத்துக்கு சாட்சியாக ஏராளமான பொருள்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 13 ஆம் தேதி கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. 

அகழ்வாராய்ச்சிக்காக 54 குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில், செங்கல் கட்டுமான சுவர்கள், உறைகிணறுகள், நீர்வழிச்சாலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த சுடுமண் சிற்பங்கள் என பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்கான 800-க்கும் அதிகமான சான்றுகள் கிடைத்தன. அகழாய்வு நடத்தப்படும் பகுதிகளில் இதுவரை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். 

இந்நிலையில் 5ஆம் கட்ட அகழாய்வு இன்று மாலை நிறைவடைகிறது. இந்த அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஓரிரு வாரங்களில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஜனவரி 15ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும். இதற்காக புவியின் மேற்பரப்பில் காந்த புவியியல் கருவி கொண்டு ஏற்கெனவே ஆய்வு நடத்தப்பட்டது. 5ஆம் கட்ட அகழாய்வின் நிறைவு நாளான இன்று கீழடியில் ஏராளமானோர் திரண்டு பார்வையிட்டு வருகின்றனர்.