தமிழ்நாடு

கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பெரும் பானை

kaleelrahman

கீழடியில் நடைபெற்று வரும் 7-ம் கட்ட அகழாய்வில் பெரிய அளவிலான சிவப்பு நிற பெரும் பானை கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கீழடியில் மொத்தம் 5 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. கீழடியில் இதுவரை மண்பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மை மற்றும் கண்ணாடி பாசிகள், வெள்ளிக்காசு, செப்பு மோதிரம், உறைகிணறுகள், சுடுமண் காதணி போன்றவை கண்டறியப்பட்டிருந்த நிலையில், பழங்கால மக்கள் பயன்படுத்திய பெரிய அளவிலான பானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பானை சிவப்பு நிறத்தில் அளவில் பெரியதாகவும், பானையின் கழுத்து பகுதியை சுற்றி நுணுக்கமான வேலைப்பாடுகளும் காணப்படுகிறது. இந்த பானை இதுவரை கிடைத்த பானைகளிலேயே பெரிய அளவிலானது எனக்கூறப்படுகிறது.

இது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிவப்பு நிற பெரும்பானையை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு 'தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரிகம்' எனக்குறிப்பிட்டுள்ளார்.