கே.சி.பழனிசாமி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

புதிய இயக்கத்தை உருவாக்கும் கே.சி.பழனிசாமி.. விஜயுடன் கூட்டணியா?

புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இறங்கியுள்ளதாக தெரிகிறது.

PT WEB

செய்தியாளர்: இராமானுஜம்.கி

ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்காமல் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பாஜகவிற்கு எவ்வித பலனையும் தராது என்பதை பாஜகவிற்கு உணர்த்துவதற்காக புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இறங்கியுள்ளதாக தெரிகிறது. இவர் விரைவில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணியினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக அதிருப்தி தலைவர்களுடன் பேசியபோது, ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கும்போதே தன்னை திமுகவில் இருந்து நீக்கியபோது தொண்டர்களின் குரலுக்கு எதிரான முடிவாக பார்க்கப்பட்டது. அதனால்தான் அவர் பொதுச்செயலாளர் என்பவர் தொண்டர்கள் அனைவரும் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விதிகளை வகுத்தார்.

எடப்பாடி பழனிசாமி

இது அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முற்றிலுமாக காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதற்காகதான் நாங்கள் நீதிமன்ற படிகளில் ஏறி வருகிறோம். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை தனது குடும்பத்தினரை வழக்குகளில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக பாஜகவிடம் சரணடைந்துள்ளார். இதனை அதிமுக தொண்டர்கள் அனைவரும் முழுமையாக ஏற்கவில்லை. நானெல்லாம் ராயபுரத்தில் தோற்க கூடிய ஆளா? பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நான் தோற்றேன் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளிப்படையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் கூட எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அப்செட்டாக உள்ளார் என்ற தகவல்கள் வருகின்றன.

இதுதான் உண்மையான களநிலவரம் என்பதை மறைத்து பழனிசாமி தன்னை ராஜதந்திரி போல் காட்டிக் கொள்கிறார். இதுதொடர்பாக அதிருப்தியில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கே.சி.பழனிச்சாமி பேசி வருகிறார். தேவைப்பட்டால் விரைவில் சசிகலாவையும் அவர் சந்தித்து பேசுவார் என அதிமுக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து கேசிபியிடம் கேட்டபோது, ”எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை பாஜகவிற்கு எக்காலத்திலும் பலன் தராது. நாங்கள் இதனை எதிர்த்து இயக்கம் காணும் முடிவில் உள்ளோம்” என்றார்.

தவெக தலைவர் விஜய்

அதிமுகவில் இருந்து பிரிந்த இந்த இயக்கம் தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யவுள்ளதாக தெரிகிறது. இதில் சசிகலா போன்றவர்கள் இடம் பெற வாய்ப்பு எனத் தெரிகிறது. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமானது பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே தொடரும் எனத் தெரிகிறது.

ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்காவிட்டால் அமித் ஷாவின் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பது கானல் நீராகிவிடும் என்பதை அவர்கள் உணரும் காலம் வெகுதூரமில்லை என்பதே அதிருப்தி அதிமுக நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது. இதனை பாஜக எப்படி கையாளப் போகிறது என்பதே அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருளாக உள்ளது.