செய்தியாளர்: வி.பி. கண்ணன்
கரூர் ராயனூரில் உள்ள தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் - சரண்யா தம்பதியர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகருக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்யா, கட்டையால் சந்திரசேகர் தலையின் பின் பகுதியில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், சந்திரசேகர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சரண்யாவை கைது செய்த தான்தோன்றிமலை போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.