அரசியல் களம் மற்றும் ஜவுளி ஏற்றுமதிக்கு உலகப் புகழ்பெற்ற கரூர் மாவட்டம், தற்போது தமிழகத்தின் மிக அதிக வெப்பம் பதிவாகும் பகுதியாக மாறியுள்ளது. குறிப்பாக, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரமத்தி பகுதி, நாள்தோறும் நூறு டிகிரியைத் தாண்டிய வெப்பத்துடன் 'தமிழகத்தின் வெப்ப மையம்' எனப் பெயரெடுத்துள்ளது. பரமத்தியில் நிலவும் இந்த அதீத வெப்பத்திற்கு மனிதத் தவறுகளே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஊரைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கல்குவாரிகள், பாறைகளை உடைக்கும்போது வெளியேறும் கதிர்வீச்சு மற்றும் புழுதிப் புகையினால் காற்றின் தரம் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. நான்குவழிச் சாலைத் திட்டத்திற்காக, சாலையோரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதும், நீர்நிலைகள் வறண்டுபோனதும் இந்தப் பகுதியில் வெப்பம் தகிக்க முக்கிய காரணங்களாக உள்ளன.
விளையாட்டு மைதானத்தின் தரைப்பகுதி கடும் அனலாகக் காணப்படுவதால், விளையாடக்கூட வெளியில் வர முடிவதில்லை என அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் விவசாயம் செழித்த இந்தப் பூமி, தற்போது 'அனல் தேசமாக' மாறியிருக்கிறது. இனியாவது மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இயற்கை நமக்குத் தரும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.