மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இடம் ஒதுக்குமாறு ஸ்டாலின் நேரில் கோரிக்கை விடுத்த நிலையில், சட்ட சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கூறியது.
இதனையடுத்து, கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கை நேற்றிரவு தாக்கல் செய்தது. இதை அவசர வழக்காக நேற்றிரவே விசாரித்த நீதிமன்றம், மெரினாவில் அவர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. தற்போது, மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது என்று தெரிவித்தனர். மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய டிராபிக் ராமசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.