தமிழ்நாடு

2023 ஜூன் 3ல் கருணாநிதி நினைவிடம் திறக்க ஏற்பாடு? - வேகமெடுக்கும் கட்டுமான பணிகள்!

webteam

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. கருணாநிதி நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது. 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

கருணாநிதி நினைவிட கட்டுமானங்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட்டு வருகிற ஜூன் 3-ந் தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் போது, திறக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது.