சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தி புதியதல்ல என்று காரத்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை செய்து வருகிறது. அதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது. சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் களமிறங்கியுள்ள நிலையில் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சொத்துக்கள் முடக்கம் பற்றி கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் விளக்கம் அளித்துள்ளார். ’’சொத்துக்களை முடக்கிய விவகாரம் புதிய செய்தி அல்ல. ஆறு மாதத்துக்கு முன்பே அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கிவிட்டது. பழைய உத்தரவை தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்துள்ளது, அவ்வளவுதான்’ என்று கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித் துள்ளார்