தமிழ்நாடு

“தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்தால் எந்த பயனும் இல்லை” - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

webteam

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அதிக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் எந்த பயனும் இல்லை என கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவ்வளவு பெரிய கமிட்டி அமைத்தது எந்த பயனும் இல்லை. 32 துணைத்தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கும் அதிகாரம் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு இருக்காது” என்றார்.

முன்னதாக, தமிழக காங்கிரஸில் நீண்டகாலமாக மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் நியமனங்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புதிய நிர்வாகிகளை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநில துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயலாளர், நிர்வாக கமிட்டி, மாவட்டத்தலைவர்கள், மாவட்ட தேர்தல் கமிட்டி, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பரப்புரை குழு, பிரச்சாரக்குழு தலைவர், விளம்பரக்கமிட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு கமிட்டி, ஊடக ஒருங்கிணைப்பு கமிட்டி, தேர்தல் நிர்வாக கமிட்டி போன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.