தமிழ்நாடு

கர்நாடகா டூ தமிழ்நாடு: எல்லையை கடக்க இ-பாஸ் அவசியம்

kaleelrahman

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லவும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரவும் இ-பாஸ் முறை நேற்று முதல் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக கர்நாடகா மாநில எல்லையான ஜுஜுவாடியில் அமைந்துள்ள தற்காலிக சோதனை சாவடியில், கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை தீவிர பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. இ-பாஸ் இருந்தால் மட்டும் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இ-பாஸ் இல்லை என்றால் எல்லையிலேயே வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதோடு, அவசியம் இன்றி தமிழக எல்லைக்குள் வரவேண்டாம் என அறிவுறுத்தபட்டும் வருகிறார்கள்.

இதேபோல கர்நாடக மாநில எல்லையில், அத்திப்பள்ளி காவல்நிலைய ஆய்வாளர் தமிழக எல்லையில் மக்கள் நடமாட்டம் எப்படி இருக்கிறது என்று நேரில் பார்வையிட்டார், மேலும் சரக்கு வாகனங்களில் சென்ற மக்களுக்கு முகக்கவசம் வழங்கி பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள், தேவையின்றி வெளியே வராதீர்கள், காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அறிவுரைகளை வழங்கினர்.