கர்நாடக மாநிலத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 15 சதவீதம் பட்டியல் சமூகத்திற்கும், 3 சதவீதம் பழங்குடியினருக்கும் மீதமுள்ள 32 ஓ.பி.சி பிரிவினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், கடந்த 2022-ம் ஆண்டு பசவராஜ் தலைமையிலான பாஜக அரசு பட்டியல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை 15 லிருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 3 லிருந்து 7 சதவீதமாக உயர்த்தியது.
தொடர்ந்து, பட்டியல் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை தனிதனித்தனியாகப் பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக எழுந்து வரும் நிலையில், நீதியரசர் எச்.என். நாக மோகன் தலைமையிலான ஆணையம் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல்வர் சித்தராமையாவிடம் இந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ததது. அதில், பட்டியல் சாதி இடது கை பிரிவினருக்கு. 6% சதவீத உள் இடஒதுக்கீடும், பட்டியல் சாதி வலது கை பிரிவினருக்கு 6% சதவீத உள் இடஒதுக்கீடும், தொடுதல் உடைய சாதியினர் மற்றும் பிற உட்பிரிவினருக்கு 5% சதவீத உள் இடஒதுக்கீடும் வழங்க பரிந்துரை செய்தது.
எனினும், 50 சதவீதத்திற்கும் அதிகமாக இடஒதுக்கீடு செல்லக்கூடாது எனக் கூறி கர்நாடக அரசின் இந்த முடிவை அம்மாநில நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், இந்த இடஒதுக்கீடு முறை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இவ்வாறு, பட்டியல் சமூகத்திற்கான இடஒதுக்கீடு பிரச்னை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தான், 56,432 பணி இடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. தொடர்ந்து, பட்டியல் சமூகத்திற்கான உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தான், நேற்று முன் தினம் (ஏப்ரல் 24) சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், இடஒதுக்கீடு முறையை பழைய படியே 50% சதவீதத்தில் தொடர கர்நாடக அரசு முடிவு செய்தது. தொடர்ந்து, 15 சதவீத பட்டியல் சமூக இடஒதுக்கீட்டினை மூன்றாக பிரித்து உள் ஒதுக்கீடாக வழங்கும் மசோதாவிற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்மூலம், பட்டியல் சாதி இடது கை பிரிவினருக்கு. 5.25% சதவீத உள் இடஒதுக்கீடும், பட்டியல் சாதி வலது கை பிரிவினருக்கு 5.25% சதவீத உள் இடஒதுக்கீடும், தொடுதல் உடைய சாதியினர் மற்றும் பிற உட்பிரிவினருக்கு 4.25% சதவீத உள் இடஒதுக்கீடும் வழங்கி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்த இடஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில், காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பபடும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.