தமிழ்நாடு

காரைக்குடி: திருமணமான 4 நாட்களில் பைக் விபத்தில் கணவன் பலி: மனைவிக்கு தீவிர சிகிச்சை

webteam

காரைக்குடி அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், புதுமண தம்பதிகள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், கணவர் உயிரிழந்த நிலையில் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நெற்புகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மதன் - நதியா தம்பதியினர். மதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி நான்கு நாட்களே ஆன நிலையில், தம்பதிகள் இருவரும் காரைக்குடி சென்று விட்டு சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். இருசக்கர வாகனம் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடைபொய்கை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த இனோவா கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தம்பதிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றக்குடி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தம்பதியினரை மீட்டு காரைக்குடி அரசு புதிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மதன் உயிரிழந்தார். நதியாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காரில் வந்த ஏழு பேர் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார் ஓட்டுநர் முருகேசன் தப்பியோடியுள்ள நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய முருகேசனை தேடி வருகின்றனர்.