தமிழ்நாடு

கன்னியாகுமரி: அரபிக்கடலில் பெய்யும் கனமழை - முட்டம் கடற்கரையில் காத்திருக்கும் படகுகள்

webteam

மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் குளச்சல், முட்டம், பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்வதோடு குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படும் எனவும் எனவே அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் நேற்று மாலை முதலே சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதோடு கடல் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் தங்கள் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து கடற்பகுதியில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர்.