தமிழ்நாடு

ரூ.15 லட்சம் வாங்கியதற்கு ரூ.35 லட்சம் செலுத்தியும் தீராத கடன்

webteam

திருவண்ணாமலையில் கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருள்செல்வம் என்பவரது மனைவி மகாலட்சுமி, அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவரிடம் 2015 ஆம் ஆண்டு 15 லட்சம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். இதுவரை 35 லட்சம் ரூபாய் வரை திருப்பி செலுத்திய பிறகும் மேலும் 25 லட்சம் ரூபாய் கேட்டு மகாலட்சுமியை கோவிந்தம்மாள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. வீட்டிலுள்ள பொருட்களையும் கோவிந்தம்மாள் ஆள் வைத்து சேதப்படுத்தியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடன் நெருக்கடியால் மகாலட்சுமி இன்று தீக்குளிக்க முயன்றிருக்கிறார். அவரை அக்கம்பக்கத்தினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அவர் முயன்றார். உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று மகாலட்சுமியை மீட்டனர். இந்தக் கந்துவட்டி கொடுமை குறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.