தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ வீடு, அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

webteam

செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மது சூதனனின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை துறையினர் சோதனை நடத்தினர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய சரக்கு மற்றும் சேவை துறையினர் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். போலி நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் போலியான ரசீதுகளை வைத்து பெரும் அளவில் மோசடி செய்தது துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் மற்றும் ஆப்பூரில் உள்ள செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 4 வருடங்களாக எம்.எல்.ஏ ஆக இருக்கும் வரலட்சுமி மதுசூதனன் உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் மேன் பவர் நிறுவனம் ஒன்றினை நடத்திவருகிறார். இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோரை பணியாட்களாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனனிடம் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்களுக்கு முறையாக ஜி.எஸ்.டி செலுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறைத்துறையினருக்கு புகார்கள் எழுந்ததை அடுத்து மறைமலை நகரில் உள்ள செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வீடு மற்றும் அவரது சொந்த ஊரான ஆப்பூரில் உள்ள வீடு அவரது சகோதரர் சந்தானம் என்பவர் வீடு உள்பட 5 இடங்களில் தற்போது சோதனை மேற்கொண்டனர்.