தமிழ்நாடு

இடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம் 

webteam

சென்னையில் 3 வயது குழந்தை இடுப்பெலும்பு உடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

பெங்களூரை சேர்ந்தவர் கங்கா. இவரது கணவர் சத்தியமூர்த்தி விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். இதையடுத்து பக்கத்துவீட்டில் இருந்த வெங்கடேசனுடன் கங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கங்காவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரும் வெங்கடேசனும் சென்னை பள்ளிகரணை அடுத்த சித்தாலபாக்கம், சங்கராபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். 

இந்நிலையில், கடந்த வாரம் கங்கா, தனது மூத்த மகளை அழைத்துக் கொண்டு கேரளாவில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். 3 வயது இரண்டாவது குழந்தையை வெங்கடேசன் கவனித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு குழந்தை திடீரென மயங்கி விழுந்ததாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார் வெங்கடேஷ். ஆனால் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. 

பிரேத பரிசோதனையில் குழந்தையின் இடுப்பெலும்பு உடைந்து இருப்பதாக மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர். அடிக்கடி குடித்துவிட்டு குழந்தைகளை அடிப்பதை வெங்கடேசன் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.