MP Kanimozhi pt desk
தமிழ்நாடு

"வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது” - கனிமொழி எம்.பி.யின் காட்டமான பதிவு

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Rabiya

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக எம்.பி.யும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

"பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது.
கனிமொழி, மக்களவை எம்.பி.
Kanimozhi MP

கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.

ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், "சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

vijay
பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
விஜய், தவெக தலைவர்

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.