தமிழ்நாடு

மின்னல் வேகத்தில் பைக் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர் பலி - உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

PT

காங்கேயத்தில் மினி சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் வேகத்தில் சென்ற இருசக்கர வாகனம், மினி சரக்கு வேன் மீது மோதும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன் (19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அமிர்தவாசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், காங்கேயம் - திருப்பூர் சாலையில் நீலக்காட்டுப் புதூர் பிரிவு அருகே சென்றபோது, சாலையில் திரும்பிய மினி சரக்கு வேன் மீது மின்னல் வேகத்தில் வேகமாக சென்று மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமிர்தவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வீடியோவின்படி மினி சரக்கு வேன் சாலைப் பிரிவில் மெதுவாக திரும்புவதும், அப்போது மின்னல் வேகத்தில் இளைஞரின் இருசக்கர வாகனம் வந்து அதன்மீது மோதுவதும் தெரிகிறது. இக்காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.