தமிழ்நாடு

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

webteam

வேலூரில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இருந்து வேலூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்புவதற்காக கண்டெய்னர் லாரி சென்றுள்ளது. டீசல் நிரப்பிய பின்னர் அந்த லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளது.

அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் வந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த வாலாஜா போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டது சுங்கச்சாவடி பகுதி என்பதால் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.