தமிழ்நாடு

எடை குறைந்து வெறும் பலகை மட்டுமே மிஞ்சிய வெள்ளிப் பல்லக்கு - பக்தர்கள் அதிர்ச்சி!

webteam

ராமேஸ்வரம் கோயிலை தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான வெள்ளிப்பல்லக்கின் எடை குறைந்து வெறும் பலகை மட்டுமே இருந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் வெள்ளி நகைகளை வழங்குவது வழக்கம். இதனை 3 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்க்கும் அலுவலகர்கள் ஆய்வு செய்து அதனை அறிக்கையாக இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் கோயிலுக்குச் சொந்தமான ஆபரணங்களின் எடை குறைந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக எடை குறைவா அல்லது நகை திருட்டா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான வெள்ளிப்பல்லக்கின் எடை குறைந்து வெறும் பலகை மட்டுமே இருந்தது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கோயிலில் திருட்டுச்சம்பவங்கள் நடப்பதாக பக்தர்கள் புகார் எழுப்பினர். இதனை தொடர்ந்து வெள்ளிப்பல்லக்கின் எடை குறைந்து வெரும் பலகை மட்டுமே இருப்பது பக்தர்களுக்கு தெரியவந்தது.

இந்நிலையில், தற்போது கோயிலில் உள்ள நகைகளை, நகை சரிபார்ப்பு அலுவலர் எஸ்.எஸ்.குமார், துணை அலுவலர் சுப்பிரமணி, உதவி தொழில்நுட்ப அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் திடீரென  சரிபார்ப்புப் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளி பல்லக்கு குறித்து அலுவலரிடம் கேட்கும்போது எடையை சரிபார்த்து அறநிலைய துறையிடம் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்தார்.