தமிழ்நாடு

காஞ்சிபுரம்: மல்லிகை தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி; 8 வயது சிறுமி உயிரிழப்பு

kaleelrahman

அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பி பட்டு 8 வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பிச்சிவாக்கம் அடுத்த பட்டு முதலியார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பலராமன் விமலா தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீமதி (8) என்ற மகள் இருக்கிறார். இந்த தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தில் மல்லிகை பூ விவசாயம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் விவசாய நிலத்தின் வழியே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து, மல்லிகைப்பூ தோட்டத்தின் உள்ளே விழுந்துள்ளது.

இதையடுத்து மின் வயர் அறுந்து கிடந்ததை அறியாத சிறுமி ஸ்ரீமதி, தனது தோட்டத்தின் உள்ளே சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பி சிறுமியின் மீது பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.