காஞ்சிபுரத்தில் காவல் துறையில் மோப்ப நாய் படைப்பிரிவில் சேவையாற்றிய அஜய் என்ற நாய் இறந்ததையடுத்து, 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் படைப்பிரிவில் அஜய் என்ற மோப்ப நாய் ஒன்பது ஆண்டுகளாக சேவையாற்றியது. ஜெர்மன் ஷெப்பர்ட் ரகத்தைச் சேர்ந்த அஜய், 245 குற்ற வழக்குகளில் பணியாற்றியுள்ளது. அதில் 12 வழக்குகள் துப்பு துலங்க உதவி செய்துள்ளது.
குறிப்பாக கடந்த ஜூலை மாதம் சாலவாக்கத்தில் நடந்த கொலையில் கொலையாளி வசீகரன் என்பவரை அடையாளம் காட்டியது. அதேபோல் தமிழக அளவிலான பல்வேறு பணித்திறன் போட்டிகளில் பங்கேற்ற அஜய் பல பதக்கங்களை குவித்துள்ளது.
இந்நிலையில், வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் இறந்த அஜய் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பின்னர், உடலை நல்லடக்கம் செய்வதற்கு முன்பாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.