தமிழ்நாடு

காஞ்சிபுரம்: மகளுக்கு நடத்துவது போல் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய தம்பதியினர்

kaleelrahman

காஞ்சிபுரத்தில் தனது சொந்த மகளுக்கு நடத்துவது போல். வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி  தம்பதியினர் மகிழ்ந்துள்ளனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள உலகளந்த பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம், ரேவதி தம்பதியினர். இந்த தம்பதியினர், டைசன் என்ற பொமேரியன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்கள். இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தால் டைசனை தனது மகளாகவே நினைத்து வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் டைசன் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகளுக்கு வளைகாப்பு நடத்தி பார்க்க ஆசைப்பட்ட செல்வம் ரேவதி தம்பதியினர், அழைப்பிதழ் தயார் செய்து, உறவினர்களுக்கு 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பினர். இதையடுத்து இன்று காலை, நாய்க்கு பட்டாடை உடுத்தி, நகைகள் அணிவித்தனர்.

பின்னர், அங்குள்ள கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்த அவரது உறவினர்கள் நாய்க்கு சந்தனம் குங்குமமிட்டு முன் கால்களில் வளையல்களை அணிவித்தனர். விழாவுக்கு வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு பழங்கள் உள்ளிட்ட தாம்பூல பொருள்களை வழங்கினர்.