தமிழ்நாடு

முதியோர்கள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்..!

முதியோர்கள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்..!

Rasus

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வரதராஜர் பெருமாள் கோயிலில் உள்ள திருக்குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, அத்திவரதர் தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை பிடிப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் தளர்ந்த முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வினை கூடுமானவரை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.