மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மாநிலச் செயலாளராக இருந்த கமீலா நாசர், கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் நாசரின் மனைவியான கமீலா நாசர் , தொடக்கம் முதலே மக்கள் நீதி மய்யத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 92000 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயில் ஆகிய இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் வாய்ப்பு தரப்படாததால் அதிருப்தியில் இருந்த கமீலா நாசர் சில வாரங்களுக்கு முன்பே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை தலைமை அலுவலகத்தில் அளித்திருந்தார். இந்நிலையில் அவருடைய விலகல் கடிதத்தை ஏற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசர் விடுவிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.